அதிக வட்டி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது
நாகர்கோவில்: தக்கலை அருகே அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ரூ 20 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை அருகே உள்ள மணலி சந்திப்பில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் ஸ்டீபன். இவர் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி மூளைச்சல் காட்டுவிளையை சேர்ந்த ஓய்வு பெற்ற பாஸ்டரான கிறிஸ்டோபர் லெவி ஸ்டீபன் நிறுவனத்தில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்தார். டெபாசிட் காலம் முடிந்த பிறகும் ஸ்டீபன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்காததை அடுத்து கிறி்ஸ்டோபர் லெவி நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் டிஎஸ்பி மறைமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஸ்டீபன் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி லெட்டீஷியா கிரேஷில்டா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ஸ்டீபன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
அவரது மனைவி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து பொருளாதார பிரிவு டிஎஸ்பி மறைமலை கூறும்போது, தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஸ்டீபன் ரூ.20 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஸ்டீபன் நிதி நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் நேரில் ஆஜாராகி புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.