பின்லேடனுக்கு சென்னை மசூதிகளில் 'ஜனாஸா' தொழுகை: ராம.கோபாலன் கண்டனம்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கானோரை இஸ்லாத்தின் பெயரால் பயமுறுத்திக் கொன்ற பின்லேடனை அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் தாக்கிக் கொன்று இருக்கிறது. அந்த பின்லேடனுக்காக முஸ்லீம் அமைப்புகள் சில சென்னையில் நேற்று தொழுகை நடத்தியுள்ளது பற்றி சில கேள்விகள்.
- பின்லேடனுக்குத் தொழுகை நடத்துவது, பாகிஸ்தான் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டே பயங்கரவாதத்தை ஒழிப்பதாகச் சொன்னது போல ஆகிவிடாதா?.
- இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தத் தவறும் மத்திய, மாநில அரசுகளால் சர்வதேச அரங்கில், மற்ற நாடுகளினால் "நம் நாடும் பயங்கரவாதிகளின் புகலிடம்தான்' என்ற பழி வந்து சேராதா?.
- பின்லேடனுக்காகத் தொழுகை என்ற பெயரில் மதத் தீவிரவாதத்துக்கு கொம்பு சீவ அனுமதிக்கலாமா?.
- பின்லேடனின் தீயசெயலின் புகழைப் பரப்ப இப்படி கூட்டம் நடத்த அனுமதிப்பதன் மூலம் சாதாரண முஸ்லீம்கள் மத அடிப்படைவாத பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்ட அனுமதிக்கலாமா?.
- பின்லேடன் நேரடியாக இந்தியாவுக்கு தீங்கு செய்யவில்லை என்ற வாதம் புரட்டுவாதம். அல் கொய்தாவின் ஆதரவால்தான் பல பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் நடைபெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மறுக்க முடியுமா?.
- மத அடிப்படைவாத பயங்கரவாதியை ஆதரிக்க அனுமதிப்பதன் மூலம் பயங்கரவாதச் செயலுக்கு மாநில, மத்திய அரசுகள் துணை போகிறதா?.
- பின்லேடனை அமெரிக்கா தீர்த்துக் கட்ட, உலக இஸ்லாமிய நாடுகள் துணை நின்றன. பின்லேடனைக் கொன்றபின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்கூட அமைதியாக இருக்கும்போது இந்தியாவில் இதுபோன்ற கூட்டங்களின் பின்னணி என்ன?.
- பின்லேடன் சர்வதேசக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன், இந்தியாவில் பதுங்கியிருந்தாலும் கொன்றோ, பிடித்துக் கொடுக்கப்படவோ வேண்டியவன். அப்படிப்பட்டவனுக்குத் தொழுகை என்றால், பிடித்துக் கொடுக்கும் நிலை இந்தியாவில் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?.
- விடுதலைப் புலி பிரபாகரன் இறப்பிற்கு இரங்கற்பா பாடிய தமிழக முதல்வர் கருணாநிதியின் தவறான முன் உதாரணத்தை முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் முன் வைத்து வாதிடுகிறார்களே! இதற்கு யார் பொறுப்பு?.
- மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமும், சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலும் நாட்டின் பொது அமைதியைக் கெடுக்கத் துணை போவதா?.
முஸ்லீம் அமைப்புகளின் தேச நலனுக்கு எதிரான போக்கு குறித்து நடுநிலையாளர்கள் உடன் கண்டனம் எழுப்ப வேண்டும். மத்திய மாநில அரசுகள், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சர்வதேச விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களைத் தவறான பாதைக்குத் திசை திருப்பும் தேசவிரோத வாதங்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
தேசப் பாதுகாப்புக்கும், தேச நலனுக்கும் முன்னுரிமை தந்து போராடும் இந்து முன்னணி இந்தக் கோரிக்கைகளை மக்கள் முன் வைக்கிறது என்று கூறியுள்ளார் இராம.கோபாலன்.