சினிமா தயாரிப்பில் குதிக்க திட்டமா...? மறுக்கிறார் டாடா!
டாடா குழுமம் 2004-ல் ஆட்பார் என்ற இந்திப் படத்தைத் தயாரித்தது. ஆனால் இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா மீண்டும் படம் தயாரிக்கவும், இசைக் குழு ஒன்றுக்கு பெரும் நிதியைத் தரவிருப்பதாகவும் செய்தி வெளியானது.
இதனால் பாலிவுட்டே மகிழ்ந்தது. டாடா குழுமம் படம் தயாரிப்பதால் பாலிவுட் பெரும் வளர்ச்சி காணும் என பாலிவுட் பிரபலங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
ஆனால் டாடா மீண்டும் சினிமா தயாரிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாடா குழும செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா மீண்டும் திரைப்படங்கள் தயாரிப்பதாகவும், இசை மற்றும் நாடகக் குழுக்களுக்கு நிதி அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை. அப்படி ஒரு திட்டமே டாடா குழுமத்துக்கு இல்லை. எந்த திரைப்பட நிறுவனத்துடனும் இதுகுறித்து டாடா பேச்சு நடத்தவும் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.