கோடைக்கு இதமாய் ஒரு பயணம்
பெரியார் வனவிலங்கு சரணாலயம்
தேக்கடியில் உள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் பிரசித்தி பெற்றது. 673 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், மான்கள், குரங்குகள், பைசன்கள் என இந்த சரணாலயத்தில் ஏராளமான விலங்குகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.. இங்கு ஓடும் பெரியாற்றில் வனவிலாங்குகள் தண்ணீர் அருந்துவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாகும்.
படகு சவாரி
தேக்கடி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது படகுசவாரிதான். அந்தளவிற்கு பிரசித்தி பெற்றது. இங்கு சுற்றுலா வருபவர்கள் 14 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். யானை, புலி, மான் என தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை அருகில் கண்டு ரசிக்கலாம்.
யானை சவாரி
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விசயம் யானை சவாரி. கம்பீரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து சரணாலயத்தின் இயற்கை அழகை ரசிப்பது மறக்கமுடியாத அனுபவம்.
முல்லைப் பெரியாறு அணை:
பிரபலம் வாய்ந்த முல்லைப்பெரியாறு அணை இங்குதான் அமைந்துள்ளது. பென்னிகுக் என்ற ஆங்கிலேயரால் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை தமிழகம் மற்றும் கேரளாவின் மிக முக்கிய நீராதாரமாகும். தேக்கடியில் வனத்துறையால் நடத்தப்படும் டிரெக்கிங்கும் பிரசித்தி பெற்றது.
தேக்கடியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சை வெல்வெட் போர்த்தியது போல காணப்படும் புல்லுமேடு மற்றும் டிரைபல் ஹெரிடேஜ் மியூசியம் போன்ற இடங்களும் பார்க்கத் தகுந்த இடமாகும்.
குமுளி
தேக்கடி பகுதியை ஒட்டியிருக்கும் நகரமான குமுளி பிரசித்தி பெற்ற சந்தைமையமாகும். தேக்கடி வனப்பகுதியில் கிடைக்கும் வாசனைப்பொருட்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.
எப்படி போவது
மதுரையில் இருந்து 114 கிலோ மீட்டர் தொலைவில் தேக்கடி அமைந்துள்ளது. மதுரை, திருவனந்தபுரம், கம்பம், தேனி போன்ற நகரங்களில் இருந்து குமுளி செல்லும் பேருந்தில் ஏறினால் தேக்கடியை அடையலாம். இயற்கையை அணு அணுவாக ரசிக்க நினைப்பவர்கள் குடும்பத்தோடு தேக்கடிக்கு சென்று விட்டு வரலாம்.