கோவை தபால் நிலையங்களில் குறைந்த விலையில் பார்சல் சேவை
கோவை: தேசத்தின் எந்த பகுதிக்கும் குறைந்த விலையில் பார்சல் அனுப்பும் திட்டம் கோவை தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாட் ரேட் பார்சல் சர்வீஸ்;
சொந்த காரணங்களுக்காகவும், வியாபார ரீதியாகவும் 'பார்சல்' அனுப்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதிக விலை காரணமாக பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில், தபால்துறை சார்பில் ஒரே விலையில் இந்தியா முழுவதும் பெட்டிகள் மூலமாக, பார்சல்களை அனுப்பும் 'பிளாட் ரேட் பார்சல் சர்வீஸ்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் துவக்கப்பட்ட இத்திட்டம், கோவையில் கடந்த 5-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அஞ்சலக முத்திரையிடப்பட்ட பெட்டிகளில் ஐந்து கிலோ வரை பார்சல் அனுப்பலாம் என கோவை, குட்ஷெட் ரோட்டிலுள்ள தலைமை தபால் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறைந்த கட்டணம்:
ஒரு கிலோவுக்கு ரூ. 125ம், இரண்டரை கிலோ வரை ரூ. 200ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட எடையிருந்தால் ரூ. 400 வசூலிக்கப்படும். பணம், ஆபரணம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தவிர ஏனைய பொருட்கள் எதையும் இந்த பெட்டியில் அனுப்பலாம்.
டிராக் செய்ய முடியும்:
பெட்டியின் எண்ணை வைத்து, இணையதளம் மூலமாக பார்சல் உரிய இடத்தை அடைந்து விட்டதா, எங்கு உள்ளது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். கோவையில் முதல்கட்டமாக குட்ஷெட் ரோடு, ஆர்.எஸ். புரம், போத்தனூர், ராம்நகர், லாலி ரோடு உட்பட 11 தபால் நிலையங்களிலும், பொள்ளாச்சி, உடுமலை போன்ற முக்கிய தலைமை தபால் நிலையங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.