சரக்கு ஆட்டோவில் வந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்: திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பொருட்கள் கொண்டு வந்த சரக்கு ஆட்டோவில் வாக்குப்பதிவு இயந்திரமும் இருந்தது. இதை பூத் ஏஜென்டுகள் கண்டுபிடித்துவிட்டதால், அதனை திரும்பக் கொண்டு செல்ல முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அப்போது பயன்படுத்த மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர், டிவி போன்ற பொருட்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும் பணி நேற்று துவங்கியது.
ஆட்டோவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இந்நிலையில் நேற்று சரக்கு ஆட்டோ ஒன்று திருப்பூர் வடக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான நாற்காலிகள், மேஜைகள் மற்றும் அரசு இலவச தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அந்த ஆட்டோவில் வாக்குப்பதிவு இயந்தியரமும் இருந்தது. இதனைக் கண்டு அங்கிருந்த வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பரபரப்பு
இதற்கு விளக்கம் கேட்டு ஏஜென்டுகள் சத்தம் போடத் துவங்கினர். ஆட்டோவை உள்ளே விட மறுத்ததுடன் ஆட்டோ சாவியையும் கைப்பற்றிக்கொண்டனர். அங்கிருந்த போலீசாரும், டி.எஸ்.பி ராமகிருஷ்ணனும் ஏஜென்டுகளுடன் பேசினர். ஆனால், அவர்களாலும் ஏஜென்டுகளைச் சமாதனப்படுத்த முடியவில்லை. அங்கே எப்படி இயந்திரம் வந்தது என சரமாரியான கேள்விகளால் போலீசாரை அவர்கள் துளைத்தனர்.
போலீசார் சாமர்த்தியம்
எஜென்டுகளை சமாதானம் செய்வது போல் பேசி எப்படியோ ஆட்டோ சாவியை திரும்ப பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி., அங்கிருந்து ஆட்டோவை திரும்ப எடுத்துச் செல்ல அனுமதித்தார். அதிர்ச்சியடைந்த ஏஜென்டுகள், கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். பைக்குகளில் ஆட்டோவை விரட்டிச் சென்று, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மடக்கிப் பிடித்தனர். அந்த இடத்தில் அ.தி.மு.க. வினர் பெருமளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் அதிகாரி
தொகுதி தேர்தல் அலுவலர் சொக்கன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் சந்தியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாசில்தார் அலுவலகத்துக்கு செல்லலாம் என்று சமாதானம் செய்து அவர்களை அழைத்தனர். அதே ஆட்டோவில் கட்சியினர் சிலரும் ஏறிக்கொண்டனர். தாசில்தார் அலுவலகத்தில் அந்த இயந்திரம் திறந்து காட்டப்பட்டது. அதில் 1005 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. அதனை கட்சியினர் குறித்துக்கொண்டனர்.
தவறுதலாக ஏற்றப்பட்டது
பொதுமக்களுக்கு செயல் விளக்கம் (டெமோ) காண்பிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம் அது. பொருட்கள் ஏற்றும்போது ஊழியர்கள் தவறுதலாக அதையும் ஏற்றிவிட்டனர். இதில், வேறெந்த பிரச்சனையும் இல்லை என தேர்தல் அலுவலர் சொக்கன் தெரிவித்தார்.