மனைவி மரியாவைப் பிரிகிறார் அர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர்!!
இத்தகவலை அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினர் திடீரென திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்திருப்பது உலகெங்கும் உள்ள அர்னால்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட யோசனைக்கும் ஆலோசனைக்கும் பின்னர், நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அர்னால்டும் அவரது மனைவி மரியா ஷ்ரிவரும் தெரிவித்துள்ளனர்.
இனி பிரிந்து வாழ்ந்தாலும், தங்களின் 4 குழந்தைகளின் எதிர்காலத்தில் நாங்கள் கூட்டாகவே செயல்படுவோம் என்றும் அர்னால்டு தம்பதியினர் கூறியுள்ளனர்.
கலிபோர்னியா மாகாண ஆளுநராக 7 ஆண்டுகளாக இருந்த அர்னால்டின் பதவிக் காலம் 2011 ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.
ஆளுநராக பதவி ஏற்றபோது, திருமணமானதிலிருந்து பிரியாத ஜோடி என கலிபோர்னியா மக்கள் அல்னால்டையும் மரியாவையும் பாராட்டியிருந்தனர். இவர்களின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அர்னால்ட் - மரியாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அர்னால்ட். ஆளுநராக இருந்தபோது, அரசுப் பணி மற்றும் குடும்பத்துக்காக திட்டமிட்டு நேரத்தை ஒதுக்கியவர். மக்களுக்கும் இதை தெரியப்படுத்தியவர். அந்த அளவு நெருக்கமான தம்பதிகளாக இருந்தவர்கள் பிரிந்தது பற்றித்தான் இப்போது அமெரிக்கா முழுக்க பரபரப்பு செய்தியாக உள்ளது.