விபத்தில் பலியானவரிடம் திருடிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்: விருதுநகர் எஸ்.பி. அதிரடி
விருதுநகர்: விபத்தில் பலியானவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ. 42 ஆயிரம் திருடிய போக்குவரத்து எஸ்.ஐ. ராமசாமியை விருதுநகர் எஸ்.பி. பிரபாகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேலநட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி மாருதி வேனில் சென்றுக் கொண்டிருந்தார்.
வேன் விருதுநகர் ஆயுதப்படை மைதானம் அருகே சென்று கொண்டிருக்கையில் எதிரே வந்த கார் மீது மோதியதில், பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த போக்குவரத்து எஸ்.ஐ. ராமசாமி, சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் பலியான பாண்டியராஜனிடமிருந்த செல்போன், ரூ. 42 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளார்.
அதன் பின்பு அங்கு சென்ற சூலக்கரை எஸ்.ஐ. செல்வராஜ் விபத்து குறித்து விசாரணை நடத்தினார். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் பாண்டியராஜன் உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் விபத்தில் பலியான பாண்டியராஜனின் செல்போன், ரூ. 42 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரியும் விருதுநகர் எஸ்.பி. பிரபாகரனிடம் மனு அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்த டி.எஸ்.பி. பிச்சைக்கு விருதுநகர் எஸ்.பி. பிரபாகரன் உத்தரவிட்டார்.
விசாரணையில் விபத்தில் பலியான பாண்டியராஜனின் செல்போன், ரூ. 42 ஆயிரம் ரொக்கத்தை போக்குவரத்து எஸ்.ஐ. ராமசாமி திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போக்குவரத்து எஸ்.ஐ. ராமசாமியை விருதுநகர் எஸ்.பி. பிரபாகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.