சாட்டையைச் சுழற்றும் மாநகராட்சி - வழிக்கு வந்த வணிகர்கள் - தட்ஸ்தமிழ் 'எக்ஸ்குளூசிவ்'
கோவை: கோவை மாநகராட்சியின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டிய வணிகர்கள் அடி பணியத் துவங்கியுள்ளார்கள்.
விதிமுறை மீறல்:
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1000 கட்டிடங்களுக்கு மேல் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கண்டுபிடித்தது.
முறையான அனுமதியின்றி கட்டப்பட்டவை, அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டப்பட்டவை, வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காதவை போன்ற கட்டிடங்கள் இதில் அடங்கும். விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உடனே சரி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.
சீல் வைப்பு:
ஆனாலும், மாநகராட்சி எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்டு பல வணிக நிறுவனங்கள் அலட்சியமாக இருந்தன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே இக்கடிட உரிமையாளர்களுக்கு ஆப்பு வைக்க முடிவெடுத்தது கோவை மாநகராட்சி.
இதனையடுத்து சரி செய்யப்படாத கட்டிடங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அன்சுல் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள் சீல் வைக்கத் துவங்கினர்.
வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள 4 வணிக வளாகங்கள், கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ளகடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நான்கு அடுக்கு கடை, ஆர்.எஸ். புரத்தில் இயங்கி வந்த புகழ்மிக்க கண் மருத்துவமனை ஆகியவையும் இந்த அதிரடிக்கு தப்பவில்லை.
கடைசி வாய்ப்பு:
விதிமீறல் கட்டிடங்களுக்கான கடைசி வாய்ப்பாக கட்டிட உரிமையாளர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டது. அதன்படி, உரிமையாளர்கள் ஒருவாரத்திற்குள் கட்டிடங்களைச் சரி செய்து விடுவதாக மாநகராட்சிக்கு ரூ.20/- பத்திரத்தில் உறுதியளித்தது. அதனைத் தொடர்ந்து சீல் வைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வழிக்கு வந்த வணிகர்கள்:
இனிமேலும் மாநகராட்சியின் கண்களை மண்ணை துவ முடியாது என்ற முடிவுக்கு வந்த வணிகர்கள், தங்களது கட்டிடங்களில் உள்ள விதிமீறல்களைச் சரி செய்ய துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட நான்காவது மாடி இடிக்கப்பட்டு வருகிறது.
ஆட்டோ உதிரி பாகங்கள் விற்கின்ற கடை ஒன்றில் வாகன நிறுத்த வசதி இல்லாமல் இருந்தது. கடையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பார்க்கிங் வசதி செய்யப்பட்டதுடன், வாகனங்கள் நிறுத்தும் இடம் எனும் புத்தம் புதிய பெயர்ப்பலகையும் அங்கே மின்னுகிறது.
கண் மருத்துவமனை ஒன்றின் பார்க்கிங் பகுதி பழைய சாமான்கள் போட்டு வைக்கும் இடமாகச் செயல்பட்டு வந்தது. மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள் கூட வெகுதொலைவில்தான் நிறுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவசர அவசராக சுத்தம் செய்யப்பட்ட பார்க்கிங் பகுதியில், வாகனங்கள் நிறுத்தும் இடம் எனும் பெயர்ப்பலகை மின்னுகிறது.
ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும்தான் கறக்க வேண்டி இருக்கிறது என்று புன்னகைக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.