அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது: ஜெயேந்திரர்
சேலத்தில் உள்ள சங்கர மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அயோத்தி விவகாரம் சுலபமாக தீர்க்கக் கூடியது அல்ல. வாஜ்பாய் ஆட்சியில் இந்து அமைப்புகளையும், சன்னி வக்பு வாரியத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் மறுநாளே நீதிமன்றத்தை நாடினர்.
அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமோ, சட்டரீதியாகவோ தீர்வு காணவே முடியாது. ஒருவேளை நீதிமன்றத்தின் மூலம் இறுதித் தீர்ப்பு கிடைத்தாலும் அது என்றும் நிலைத்திருக்காது. பேச்சுவார்த்தை மூலமே இந்த விஷயத்தில் நிரந்தர- சுமூகத் தீர்வு காண முடியும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இப்போது மீண்டும் முயற்சி நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி இது தொடர்பாக இரு மதத் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள நான் செல்ல டெல்லி செல்கிறேன்.
அயோத்தியில் மடத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதில் சன்னி வக்பு வாரியத்தைச் சேர்ந்தவர்களும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். அனேகமாக இந்த பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு எட்டப்படும் என்று எண்ணுகிறேன். அயோத்தி பிரச்னையில் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
14ம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுவாக சமயம் தொடர்பான பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை அணுகாமல் பேசித் தீர்ப்பதே நல்லது.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். ஆனால், ஆன்மிக அரசு ஆட்சிக்கு வர வேண்டும். எங்களை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களையே நாங்களும் ஆதரிப்போம் என்றார்.