அதிமுகவில் ஜொலித்த ஜாதி-மத கட்சிகள்-திமுகவில் காணாமல் போன மாயம்!
சென்னை: தமிழகத்தில் வழக்கமாக கணிசமான வாக்கு வங்கிகளை வைத்திருக்கும் ஜாதிக் கட்சிகளுக்கு இந்த முறை இரு விதமான 'ட்ரீட்மென்ட்'டை தமிழக மக்கள் தந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
அதேபோல அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இதில் கொங்கு இளைஞர் பேரவையும், கொங்கு முன்னேற்றக் கழகமும் தனி வாக்கு வங்கியை வைத்திருந்ததாக கூறப்பட்டது. அதிலும் கொங்கு முன்னேற்றக் கழகம், கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை தொகுதிகளையும் நாங்கள் வெல்வோம் என்று முழங்கியது.
ஆனால் ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சியால் இன்று வெல்ல முடியாமல் போயுள்ளது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அது மோசமான தோல்வியைத் தழுவுகிறது. கொங்கு மண்டலம், அதிமுகவின் கோட்டை என்பதை அதிமுக இன்று நிரூபித்துள்ளது.
அதேசமயம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் போட்டியிட்ட தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை வெல்லும் வாய்ப்பில் உள்ளது.
அதேபோல இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியின் ஏக போக பிரதிநிதி யார் என்ற போட்டியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், மனித நேய மக்கள் கட்சியும் ஈடுபட்டிருந்தன. இதில் திமுக கூட்டணியில் இருந்த முஸ்லீம் லீக் தோல்வியடைந்துள்ளது. இக்கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் தோல்வியடைகிறது.
அதேசமயம், அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெல்கிறது.
அதேசமயம், மூவேந்தர் முன்னேற்றக் கழகமும், மூவேந்தர் முன்னணிக் கழகமும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளன. இருவருக்குமே ஒரு சீட் கூட கிடைக்காத நிலை.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பார்வர்ட் பிளாக் கட்சி தான் போட்டியிடும் உசிலம்பட்டியில் வெல்கிறது.
எந்த ஜாதிக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் பலம் அவர்களுக்குக் கை கொடுப்பதில்லை. அவர்கள் யாருடன் கூட்டு சேருகிறார்கள் என்பதைப் பொறுத்தே அது உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது.