கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
வழக்கமாக போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் இந்த முறை ஸ்டாலின் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதால் அங்கு போட்டியிடப் பயந்து கொளத்தூர் தொகுதிக்குப் போய் போட்டியிட்டார்.
ஆனால் ஸ்டாலினை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அப்பழுக்கற்றவர் என்று பெயர் பெற்ற சைதை துரைசாமியை நிறுத்தினார். இதனால் அங்கு போட்டி கடுமையானது.
அதிமுகவின் தீவிரப் பிரசாரம் காரணமாக ஸ்டாலினின் வெற்றி மிகவும் இறுக்கமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் இடையே மிகவும் மெல்லிய வாக்கு இடைவெளி இருந்து வந்ததால் ஸ்டாலின் வெல்வாரா என்பது கேள்விக்குறியாகி விட்டது. ஒரு கட்டத்தில் ஸ்டாலின் தோல்வி என்று கூட செய்திகள் வந்தன.
இதற்கிடையே, கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார் ஸ்டாலின். ஆனால் கடைசிச் சுற்றின்போது 3 வாக்குப் பெட்டிகள் பழுதடைந்தன. இதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர்.
வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரிக்கு வெளியே அவர்கள் மறியல் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் இறுதியில், ஸ்டாலின் 68,784 வாக்குகளை அவர் பெற்றார். 2819 வாக்குகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமியை அவர் தோற்கடித்தார்.
நள்ளிரவு வாக்கில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சைதை துரைசாமி வென்றிருந்தால் அவர் அமைச்சராகும் வாய்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.