மின்வெட்டை சரிசெய்ய முன்னுரிமை: ஆளுநரைச் சந்தித்த பின் ஜெ பேட்டி!
சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சியமைக்கிறது அதிமுக.
ஆட்சியமைக்க முறைப்படி உரிமை கோர, இன்று காலை ஆளுநர் பர்னாலாவை ராஜ் பவனில் சந்தித்தார் ஜெயலலிதா. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டமன்ற அதிமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்த தீர்மான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பொறுப்பேற்கவும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும் முறைப்படி அழைப்பு விடுத்தார் ஆளுநர் பர்னாலா.
இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்.
இதைத் தொடர்ந்து நிருபர்களை ராஜ்பவனில் சந்தித்தார் ஜெயலலிதா.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுடம் அதற்கு ஜெயலலிதா தந்த பதில்களும்:
நீங்கள் ராஜ் பவனுக்கு வருகை தந்தது பற்றி...?
நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.
தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.
நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
ஏற்கனவே கடந்த 13-ந்தேதி இதுபற்றி விரிவாக சொல்லி உள்ளேன்.
சரி மீண்டும் கேட்கிறோம் சொல்லுங்கள்.... அதிமுக அரசின் முதல் நடவடிக்கை, முன்னுரிமைத் திட்டம் என்னவாக இருக்கும்?
மின்வெட்டைச் சீரமைப்பதே எனது அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும். அதுமட்டுமல்ல, மாநிலம் முழுவதிலும் பல துறைகள் பின்னடைந்த நிலையில் உள்ளன. அவற்றைச் சீரமைத்து ஒழுங்குபடுத்துவதற்கும் முன்னுரிமை தரவிருக்கிறோம். தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது.
விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்.
பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?
நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.
உங்கள் அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்?
அதைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். பின்னர் சொல்கிறோம்.
சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா?
எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலை பேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.