அமைச்சரவையில் கொங்கு வேளாளர்களுக்கு 8 இடம் கொடுத்த ஜெ.
சென்னை: வழக்கமாக முக்குலத்தோர் சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த முறை கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
திமுக ஆட்சிக்காலத்தில் பெரும் சரிவுகளை அதிமுக சந்தித்து வந்தபோது கோவையில் நடந்த பிரமாண்டக் கூட்டம்தான் அதிமுகவை தூக்கி நிறுத்த உதவியது. இதை மனதில் கொண்டு கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு கவனிப்பை ஜெயலலலிதா செய்துள்ளதாக கருதப்படுகிறது.
33 அமைச்சர்கள் கொண்ட ஜெயலலிதா அமைச்சரவையில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் சீனியர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் போக சண்முகவேலு, பழனிச்சாமி, கே.வி.ராமலிங்கம், எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி, தங்கமணி, பழனியப்பன் ஆகியோரும் கொங்கு வேளாள கவுண்டர் சமூ்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, குறிப்பாக கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினருக்கு இந்த அளவுக்கு அதிக பிரதிநிதித்துவம் இதற்கு முன்பு தரப்படவில்லை, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.