தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது: யோகா குரு ஜக்கி வாசுதேவ்
கோவை: தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என்பதே ஒருமித்த செய்தியாக தேர்தலில் வெளிப்பட்டுள்ளது என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது
ஜாதி, மதம், பணம் இவை எல்லாவற்றையும் தாண்டி தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்திய பெருமை முழுவதும் தமிழக மக்களையே சாரும். தமிழக மக்கள் எந்தக் குழப்பமுமின்றி உறுதியான முறையில் வாக்களித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். இந்தத் தீர்ப்பு ஊழலற்ற, நேர்மையான அரசை அளிப்பதற்கான ஒரு நினைவூட்டலாக எப்போதும் இருக்கும்.
மக்களை யாரும் ஏமாற்ற முடியாது
மக்களை யாரும் ஏமாற்ற முடியாது; வசப்படுத்த முடியாது; மக்களை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு ஒட்டுமொத்தச் செய்தியாகத்தான் தமிழக தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டிருக்கின்றன.
ஜெயலலிதா தலைமையின் கீழ் தங்களுக்கு உண்மையான நலனும், வளமான வாழ்க்கையும் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள். அதற்காக சேவை செய்ய ஜெயலலிதாவுக்கும், அவருடைய புதிய அரசில் அங்கம் வகிக்க இருப்பவர்களுக்கும் தெய்வீக அருள் துணை புரியட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காலங்கள் மாறும் அது கதையாகிப் போகும்
ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார்கள். அரசு உயர் அதிகாரிகளும், திரைத்துறையினரும், தொழில் அதிபர்களும் தான் மலர்ச்செண்டுகளோடு ஆள்வோர்க்கு ஜே போடுவார்கள். இந்தப் பட்டியலில் நவீன சாமியாரான ஜக்கியும் இணைந்துள்ளார். இதற்கு முன் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவர்களோடு சேர்ந்து 7.5 கோடி மரக்கன்று உள்ளிட்ட பல திட்டங்களைச் செய்தவர்தான் ஜக்கி என்பது குறிப்பிடத்தக்கது.