பாகிஸ்தானில் சவுதி தூதரக அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: கராச்சியில் சவுதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெற்கு பாகிஸ்தானில் உள்ள சவுதி தூதரகத்தில் குண்டுகள் வீசப்பட்ட 5 நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சவுதி தூதரக அதிகாரி ஹசன் எம். எம். அல் கதானி அலுவலகத்திற்கு செல்கையில் அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழி மறித்துள்ளனர். பின்னர் அவர்கள் ஹசனை சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவரை ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பஹ்ரைன் தூதரக்கத்திற்கு அருகில் நடந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சவுதி தூதரகம் இறந்தவர் தூதரக அதிகாரி தான் என்று உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 11-ம் தேதி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரண்டு குண்டுகளை கராச்சியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் வீசினர். இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை.
ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதலில் தூதரக வளாகத்திற்குள் உள்ள கட்டிடங்கள் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல்கள் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு தான் நடந்துள்ளன. பாகிஸ்தானில் இருக்கும் சவுதி அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளை சவுதி துணை வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சௌத் கேட்டுக் கொண்டுள்ளார்.