போக்குவரத்து நெரிசல்: அலுவலகத்திற்கு நடந்தே சென்ற பிரவீண் குமார்
சென்னை: நேற்று பதவியேற்பு விழாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தனது அலுவலகத்திற்கு நடந்தே சென்றார்.
நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. இந்த பதவியேற்பு விழா சென்னை
பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழா முடிந்தும் நெடுநேரம் வரை போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதனால் கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த பதவியேற்பு விழாவிற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், தனது மனைவி அனிதா பிரவீண் குமாருடன்(நிதித்துறை அதிகாரி) வந்திருந்தார். போக்குவரத்து நெரிசல் குறைவதாகத் தோன்றாததால் இருவரும் நடந்தே கோட்டையில் உள்ள தங்கள் அலுவகத்திற்கு சென்றனர்.