தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை மாற்றினார் ஜெ-வெங்கடேசன் நியமனம்
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்கள், சென்னை போலீஸ் கமிஷ்னர், சட்டமன்றச் செயலாளர் ஆகியோரை மாற்றினார்.
இந் நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரையும் மாற்றியுள்ளார். இந்தப் பதவியில் வெங்கடேசன் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞரான அசோகன் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை நீதிமன்றத்தில் திமுக பிரமுகர்கள் ஆஜர்:
இந் நிலையில் மதுரை திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் மதுரை ஜுடீசியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கடந்த மாதம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி காரில் வந்தபோது, திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் எம்பி மாணித்தாகூர், மதுரை துணை மேயர் மன்னன், பொட்டு சுரேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்த நிலையில் இன்று காலை இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் சென்றனர்.