தேர்தலில் சிதம்பரம் கோஷ்டி படுதோல்வி: கனவு பொய்த்தது
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 14 பேரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது. கட்சிக்குள் ஏகப்பட்ட கோஷ்டி, அந்த கோஷ்டிக்குள் மோதல் என்று காங்கிரஸ் ஒரே மோதல் கட்சியாக உள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ஜெயிக்கலாம் என்ற நிலை மாறி, அந்த கட்சியுடன் சேர்ந்தாலே தோல்வி தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கட்சியில் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டார். இதனால் கட்சிக்குள் கோஷ்டி உருவானது. நடந்து முடிந்த தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 63 இடங்கள் ஒதுக்கியது. இதில் 14 இடங்களை தனது ஆதரவாளர்களுக்கு வாங்கிக் கொடுத்தார் சிதம்பரம்.
ஆனால் தேர்தலில் நின்ற 14 பேருமே படுதோல்வி அடைந்துள்ளனர். இதனால் சிதம்பரத்தின் கனவு பொய்த்துவிட்டது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது,
இந்த தேர்தல் முடிவுகள் சிதம்பரத்தின் மாநில அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அவர் இனி தமிழக அரசியலுக்கு வரமாட்டார்.
கட்சியை வளர்த்தால் தான் நாம் அரசியல் செய்ய முடியும் என்பதையே தலைவர்கள் மறந்துவிடுகின்றனர். அதனால் தான் காங்கிரஸ் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது என்றனர்.