ஜெயலலிதாவுக்கு பினாங்கு துணை முதல்வர் வாழ்த்துக் கடிதம்
பெனாங் துணை முதல்வர் இராமசாமி எழுதியுள்ள வாழ்த்துக் கடிதம் பின்வருமாறு,
மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,
கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தங்களின் தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கிறேன். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஈழத்தில் எமது தமிழினம் அழிக்கப்பட்டபோது வேடிக்கைப் பார்த்த கூட்டம் இன்று தோல்வியடைந்ததைக் கண்டு உலக தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர். தங்களின் வெற்றி சற்று தாமதமாக அல்லாமல், கடந்த நாடாளுமன்றத தேர்தலிலேயே எதிரொலித்திருந்தால், ஈழத்தமிழினத்தின் அழிவை ஓரளவாவது குறைத்திருக்க முடியுமே என்ற ஆதங்கம் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் குடி கொண்டுள்ளது.
தற்பொழுது தமிழக சட்டமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்திருக்கும் தாங்கள், எண்ணிலடங்கா போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசுக்கெதிராக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வருவீர்கள் என்பதே உலகத் தமிழினத்தின் பெரும் வேட்கையாக உள்ளது. நீங்கள் இந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றுகையில் உலகத் தமிழர்களின் நெஞ்சில் இடம்பெற உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை நீங்கள் தவறவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஈழத்தில் நடைபெற்ற இன அழிவை தடுக்காமல் கலைஞர் கருணாநிதி செய்த சரித்திர தவற்றை எப்படி இன்றளவும் உலகத்தமிழர்கள் மறக்கவில்லையோ, அதேபோல உலகத்தமிழின வரலாற்றில் நீங்கள் நிறைவேற்றும் இந்த தீர்மானமும் முக்கியமானதாக அமையும்.
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழகத்திற்குள் வர எனக்கு தடை விதிக்குமாறு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இருப்பினும், வருங்காலத்தில் தமிழகத்திற்கு வர எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், நிச்சயம் தங்களை வந்து சந்திக்கின்றேன். இறுதியாக, மலேசியா, பினாங்கு தமிழர்களின் சார்பாக தங்களுக்கும், தங்களின் கட்சியினருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் பினாங்கு துணை முதல்வர் எழுதியுள்ளார்.