ஏடிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு-உளவுத்துறை டிஜிபியாக நியமனம்
சென்னை: கூடுதல் டிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு டிஜிபி பணியையும் அவர் சேர்த்துக் கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக ஏற்கனவே ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது உளவுத்துறை டிஜிபியாக ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்தார். அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு டிஜிபியாக்கப்பட்டுள்ளார். இவரே சட்டம்-ஒழுங்கு டிஜிபி பொறுப்பையும் சேர்த்துக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தால் லத்திகா சரணுக்குப் பதிலாக டிஜிபியாக நியமிக்கப்பட்ட போலாநாத், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஷியாம் சுந்தர் லஞ்ச ஒழிப்பு இயக்குநராக மாற்றப்ட்டுள்ளார்.
மீண்டும் நீண்ட விடுப்பில் லத்திகா:
சட்டசபைத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதும் டிஜிபியாக போலாநாத் நியமிக்கப்பட்டார். டிஜிபியாக இருந்த லத்திகா சரண் நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்டார். தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மாத விடுப்பு கோரியிருந்தார் லத்திகா சரண். அதற்கு நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர் விடுப்பில் போயுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான ராமானுஜம், சேலத்தைச் சேர்ந்தவர். 1978ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். நீண்ட காலமாக உளவுப் பிரிவில் பணியாற்றியவர். தற்போது அதன் டிஜிபியாகியுள்ளார்.
மீண்டும் வருவார் விஜய்குமார்?:
இவரிடம் கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு டிஜிபி பொறுப்புக்கு விரைவில் தமிழக அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜய்குமார் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இப்போது மத்திய எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜய்குமார், ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இருந்தவர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பாதுகாப்புப் படையிலும் இருந்த இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளகர் ராகுல் காந்திக்கும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.