கோவையில் கல்யாண வீட்டில் ‘திருடர்’ கைவரிசை - 16 சவரன் அபேஸ்!
கோவை : கோவையில் திருமண மண்டபத்தில் மணமகன் அறையில் இருந்த 16 சவரன் நகை திருடு போனது.
திருமணம்
ஈரோடு மாவட்டம், பவானி - காரியாம்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியின் மகன் ஹரிபிரசாந்த் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவருக்கும், கோவை,ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியசாமியின் மகள் மாலதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். திருச்சி ரோடு, ஆண்டாள் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது.
நகை மிஸ்ஸிங்
மணமகனின் தங்கை பவித்ரா, தாய்மாமன் மகள் அர்ச்சனா ஆகியோரது நகைகள் ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டு மணமகன் அறையில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கும்போது தங்களது நகைகளை அணிய மணமகன் அறையை அவர்கள் திறந்தனர். நகை வைக்கப்பட்டிருந்த பூட்டியிருந்த சூட்கேஸ் திறந்து கிடந்தது. உள்ளே இருந்த 16 சவரன் நகையுடன் துணிப்பையும் காணாமல் போயிருந்தது.
போலீசில் புகார்
இதனால், திருமண மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது. சிங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் பறந்தது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்தனர். மண்டபத்தில் இருந்த வேலைக்காரர்கள், சமையல்காரர்கள் விசாரிக்கப் பட்டனர். அவர்களது உடமைகள் சோதனையிடப்பட்டன.
வேலைக்காரர்களிடம் எதுவும் கிடைக்காத நிலையில், உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்தனர். திருமணத்துக்கு வந்தவர்களை அவமரியாதை படுத்தவேண்டாம் என மணமக்களின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால் உறவினர்களிடம் விசாரணை நடத்தவில்லை. திருமண நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த வீடியோகிராபர், சந்தேகப்படும்படியான ஒரு நபர் மண்டபத்தில் நடமாடிக் கொண்டிருந்ததாக போலீசிடம் தெரிவித்தார்.