30 ஆண்டுகளில் இரண்டே பதவி உயர்வு-பரிதாப நிலையில் பெண் சப்- இன்ஸ்பெக்டர்கள்!
கோவை : முப்பது ஆண்டுகளாக பணியாற்றியும் இரண்டே, இரண்டு பதவி உயர்வுகளை மட்டுமே பெற்றுள்ளோம். எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் தேர்வானதுதான் எங்களது இந்த நிலைமைக்குக் காரணம் என்கிறார்கள் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள்.
எம்.ஜி.ஆர்., போலீஸ்
தமிழகம் முழுவதும், கடந்த 1981ல் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் (கிரேடு-1) பணிக்கான தேர்வு நடந்தது. இதில், 700 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் 1996 வரை, அதாவது 15 ஆண்டுகளாக இவர்களுக்கு தலைமைக்காவலராக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டதால், "எம்.ஜி.ஆர்., போலீஸ்' என, முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர் பதவி
இவர்களுக்குப் பின்னால் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கூட பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இது குறித்து திமுக அரசிடம் பலமுறை முறையீடு செய்யப்பட்ட பின் தலைமை காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்குப் பின் 2004ம் ஆண்டு வரை தலைமைக்காவலராகவே பணியில் தொடர்ந்தனர் இவர்கள்.
உதவி ஆய்வாளர்
பின்னார் அ.தி.மு.க., ஆட்சியின் போது, அப்போதைய டி.ஜி.பி.,யிடம் முறையிட்டனர் இவர்கள். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 1981ல் கிரேடு -1 போலீசாக தேர்வு பெற்ற அனைவருக்கும் எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டது.
பதவி உயர்வு இல்லை
அதன்பின் இவர்களுள் எவருக்கும் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு, துறைசார்ந்த தண்டனை மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாத எஸ்.ஐ.,களுக்கு பதவி உயர்வு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அது தொடர்பான ஒரு பட்டியலும் தயாரிக்கப்பட்டது. ஆனால், இவர்கள் எம்ஜிஆர் போலீஸ் எனும் முத்திரை குத்தப்பட்டு, அந்தப் பட்டியல் கிடப்பில் போடப்பட்டது. இவர்களுக்குப் பின் காவல்துறையில் சேர்ந்த பல பெண்களும் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டர்களாகி விட்டனர்.
முதல்வருக்கு மனு
இவர்களது எஞ்சிய பணிக்காலம் 7 ஆண்டுகள் மட்டுமே. தங்களது ஆயுளின் பெரும்பகுதியை காவல்துறையிலே கழித்த இவர்கள், தங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் நியாயம் கிடைக்க வேண்டும் என இவர்கள் முதல்வருக்கு தப்போது மனு அனுப்பியுள்ளார்கள்.
மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் பதவிக்காலத்தின் கடைசியிலாவது தங்களுக்கு பிரமோஷன் கொடுக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்ற பெரும் நம்பிக்கையில் இவர்கள் உள்ளனர்.