திருப்பத்தூரில் மறு வாக்கு எண்ணிக்கை-வழக்கு தொடர ராஜகண்ணப்பன் முடிவு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடர முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் முடிவு செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடந்தது.
மின்னணு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டபோது 16-வது சுற்று முடிவில் 1500 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார். 18-வது சுற்றிலும் முன்னணி வகித்தார்.
அப்போது தபால் ஓட்டு எண்ணிக்கையை சேர்த்தபோது பெரியகருப்பன் 230 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்தார்.
இந்த நிலையில் வாக்கு எந்திரத்தில் உள்ள முத்திரைகளில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்ததால், வாக்கு எண்ணும் மையத்தில் திமுக-அதிமுகவினர் இடையே ரகளை ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், டியூப் லைட்டுகள் உடைக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
அதன் பின்பு அதிகாரிகள் சமரசம் செய்து மீண்டும் ஓட்டு எண்ணப்பட்டதில் ஆயிரத்து 584 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் சுமார் 16 மின்னணு வாக்கு எந்திரங்களை மாற்றியுள்ளதாக அதிமுக தரப்பில் புகார் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ராஜகண்ணப்பன் முடிவு செய்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது.