இஸ்ரேலுடனான உறவை நரசிம்ம ராவ் ஆதரித்தபோது எதிர்த்தது காங்.-அத்வானி
இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது...
வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது இஸ்ரேலுடனான உறவு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் உண்மையில், இந்த உறவை ஏற்பட முக்கியக் காரணம் மறைந்த பிரதமர் நரசிம்மராவ்தான். அவர்தான் இந்த உறவு மீண்டும் துளிர்க்க நடவடிக்கை எடுத்தவர். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.
இருப்பினும் ஆரம்பத்தில் இந்த உறவுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்ற பயமே இதற்குக் காரணம்.
நான் 1992ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கு என்னை சந்தித்த யூதர்கள், ஏன் இன்னும் இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று கேட்டனர்.
நான் அவர்களுக்குப் பதிலளிக்கையில்,எனது கட்சிக்கு இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதில் முழு விருப்பமும், ஆதரவும் உள்ளது. ஆனால் நாங்கள் இப்போது ஆட்சிப் பொறுப்பில் இல்லை. காங்கிரஸ் கட்சிதான் நீண்ட காலமாக இந்தியாவை ஆண்டுள்ளது. இப்போதும் அவர்கள்தான் ஆட்சியில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் இல்லை. கம்யூனிஸ்டுகளும் கூட எதிர்க்கிறார்கள் என்றேன்.