கேரளாவில் காங். அமைச்சர்கள் பதவி ஏற்பதில் சிக்கல்: ஆலோசிக்கும் மேலிடம்
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 72 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 18-ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
நாளை (23-ம தேதி) காங்கிரசைச் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். காங்கிரஸ் அமைச்சர்கள் பட்டியலை முதல் அமைச்சர் உம்மன் சாண்டி சோனியா காந்தியிடம் வழங்கினார். அவர் இறுதி முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கிய பிறகு தான் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பட்டியலில் முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளிதரன், கார்த்திகேயன் மற்றும் காட்டாக்கடை சட்டன்நாடார் ஆகியோரின் பெயர்களும் இடம் பெறவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுடைய ஆதரவாளர்கள் கொதித்து போய்ப் உள்ளனர்.
இதில் முரளிதரனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதற்கு மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணியும், வயலார் ரவியும் ஆதரவாக உள்ளனர். இது சம்பந்தமாக டெல்லி மேலிடத்திலும் அவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் காட்டக்கடை தொகுதியில் நின்று அதிக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வென்ற சட்டன் நாடாருக்கு அமைச்சர் பதவி வழங்க உம்மன் சாண்டி விரும்புகிறார். ஆனால் மேலிடத்தில் சட்டன் நாடாருக்கு ஆதரவாக பேச யாரும் இல்லை.
இதே போல் கார்த்திகேயனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி ஏற்பதில் குழப்பமும், சிக்கலும் ஏற்பட்டுள்ளது.