ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதிமுறைப்படி பி.இ. 2வது ஆண்டில் கூடுதலாக 40,000 இடங்கள்
சென்னை: ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதிமுறைப்படி பி.இ. இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேரும் சதவீதம் 10ல் இருந்து 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கூடுதலாக 40,000 மாணவர்கள் சேரலாம்.
தமிழ்நாட்டில் 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 30 ஆயிரம் இடங்கள் கிடைக்கவுள்ளன. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ- மாணவியர் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணப்பங்கள் வாங்கிச் செல்கின்றனர்.
பாலிடெக்னிக் படித்த மாணவ-மாணவிகள் பி.இ. இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதை லேட்டரல் என்ட்ரி என்பர். இது வரை லேட்டரல் என்ட்ரிக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அதை 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு.
இந்த புதிய விதிமுறை தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு லேட்டரல் என்ட்ரி மூலம் கூடுதலாக 40,000 பேர் சேரலாம்.