ஜஏஎஸ் தேர்வில் செங்கோட்டை இளைஞர் 4-வது இடம்
செங்கோட்டை: செங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 4வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
செங்கோட்டை அம்மன் சன்னதி தெருவை சேர்நதவர் ராமசாமி அய்யர். இவர் கேரள பொதுபணித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கிரிசஸ்கர். கேரளாவில் பெடரல் பேங்க் மேலாளராக பணி புரிகிறார். இவரது மூத்த மகன் அபிராம் ஜி சங்கர். இவர் பிடெக் படித்து முடித்து விட்டு சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் தேர்வு எழுதினார். கடந்த வாரம் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இவர் இந்திய அளவில் 4வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து நமது தட்ஸ் தமிழ் நிருபருக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு,
ஐஏஎஸ் தேர்வு என்பது திட்டமிட்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். இத்தேர்விற்காக அதிகம் செலவு செய்யவில்லை. சென்னை சங்கர் அகாடமியிலும், கேரள அரசு அகாடமியிலும் பயின்றேன். புதுடெல்லி சென்று தான் பயிற்சி எடுக்க வேண்டிய காட்டாயம் இல்லை. சென்னையிலேயே போதிய அளவு பயிற்சி கிடைக்கிறது. மேலும், சென்னை அண்ணா நகரில் ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் எளிதில் கிடைக்கிறது. ஐஏஎஸ் படிக்க விரும்புவர்களும், பயிற்சி எடுப்பவர்களும் திட்டமிட்டு தேவையானவற்றை மட்டும் படித்தால் எளிதில் வெற்றி பெற முடியும். தினமும் 3 மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். 8 மணி நேரம் வீட்டில் இருந்து படித்தேன்.
தினமும் நாளிதழ் படிப்பது மிக மிக முக்கியம். அதேபோல் மேகசி்ன்ஸ்கள் படிப்பேன். சினிமா பார்ப்பது, மொபைல் யூஸ் பண்ணுவது என்னிடம் இல்லை. அதிக செலவும் இல்லை. புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய 2 பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்து, வெற்றி பெற்றேன். நான் கொல்லம் டிகேஎம் கல்லூரியில் பிடெக் படித்து முடித்த உடன் சத்யம், இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.23 ஆயிரத்திற்கு வேலை தேடி வந்தது. ஆனால் என் லட்சியம் ஐஏஎஸ் என்பதால் அந்த வேலையில் சேரவில்லை.
ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூவில் மார்க் இல்லை. கல்லூரி படிப்பில் மார்க் போதாதென்று பயப்பட வேண்டாம். அது தேவையற்றது. திறமையாக எழுதவும், படிக்கவும், தேடிப்பிடித்து கேள்விக்கு பதில் அளிக்கும் திறனும் இருந்தாலே போதும். மேலும் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் போது ஆங்கில அறிவு ஓரளவுக்கு தேவை. காரணம் நேர்முக தேர்வின்போது தென்னிந்தியாவில் இருந்து செல்வோர் பலர் இதனாலேயே பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் கேட்கும் கேள்விக்கும், நாம் அளிக்கும் பதிலுக்கும் மொழி பிரச்சனை ஏற்பட்டு அதனை மொழிபெயர்த்து சொல்பவர் சிறுதவறு செய்தாலும் மதிப்பெண் குறைந்துவிடும். ஆகவே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் ஆங்கில ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். என் போன்ற இளைஞர்கள் செல்போனுக்கும், சினிமாவுக்கும் செலவழிக்கும் பணத்தை விட ஐஏஎஸ் படிப்பு செலவு குறைவு தான் என்பதை கூற கடமைப்பட்டுள்ளேன். எனது வெற்றிக்காக எனது குடும்பத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள், பயிற்சி அளித்த நிறுவனங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும். இயற்கையை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றார்.
அபிராம் ஜி சங்கர் தந்தை கிரிசங்கர் கூறும்போது,
அதிக பட்சம் என் மகன் படிப்புக்காக ரூ.50 ஆயிரம் வரை செலவாகியிருக்கும். என் மகன் கல்வி ஆர்வத்திற்கு அணைபோட்டது இல்லை. மேலும் இநதிய அளவில் 4வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளது பெருமையாக உள்ளது. அதே சமயம் கேரள மாநில அளவில் எனது மகன் முதலிடம் பிடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அபிராம் ஜி சங்கரின் தம்பி அக்ஷய் பிளஸ் டூ தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்.
செங்கோட்டையை சேர்ந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.