பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிந்த மாற்றுத் திறனாளிகளின் எஸ்.எம்.எஸ். காதல்
கோவை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜோடி எஸ்.எம்.எஸ். மூலம் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
காதல் விவரம் வருமாறு,
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஜலாவுதீன் மகன் பஷீர் (23). இவருக்கு பிறவியில் இருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. காது கேளாத, வாய் பேசாதோர் பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த அவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார்.
கோவையில் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் அமைப்பின் சார்பில் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. கடந்த 6 மாத்திற்கு முன் அத்தகைய நிகழ்ச்சியில் பஷீர் தன்னைப் போன்றே காது கேளாத, வாய் பேச முடியாத மதுரை சிம்மக்கல் கந்தசாமி பிள்ளை வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் கோமதியைப்(24) பார்த்தார்.
இருவரும் தங்கள் பாஷையில் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர். செல்போன் எண்களை வாங்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் 6 மாத காலமாக எஸ.எம்.எஸ். மூலமே தங்கள் காதலை வளர்த்தனர்.
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோமதி கோவைக்கு புறப்பட்டு வந்தார். நண்பர்கள் உதவியுடன் போரூரில் உள்ள ஒரு கோயில் முன் வைத்து கோமதிக்கு தாலி கட்டினார் பஷீர்.
வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதால் கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றனர். தங்களுக்கு பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று போலீசாரிடம் மனு கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கோகிலவாணி விசாரணை நடத்தி அவர்கள் பெற்றோர்கள் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவீட்டாரும் பிடிவாதகமாக எதிர்க்கவே தம்பதியரை தொந்தரவு செய்யக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.