டெல்லி கோர்ட்டில் கனிமொழியுடன் மு.க.தமிழரசு, செல்வி சந்திப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியை, டெல்லி சிபிஐ கோர்ட் வளாகத்தில் இன்று அவரது சகோதரர் மு.க.தமிழரசு, சகோதரி செல்வி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இன்று பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் உள்ள சிபிஐ கோர்ட்டுக்கு கனிமொழி, ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
அப்போது அவர்களை தமிழரசு, அவரது மனைவி மோகனா (இவர் மு.க.ஸ்டாலினின் மனைவியின் தங்கை ஆவார்), ஸ்டாலின் மனைவி துர்கா, சகோதரி செல்வி, முரசொலி மாறனின் மனைவி மல்லிகா ஆகியோர் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் பேசி ஆறுதல் கூறினர். அவர்களுடன் டி.ஆர்.பாலுவும் உடன் இருந்தார்.
ஏற்கனவே கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்த்துப் பேசியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது ஒவ்வொருவராக வந்து பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.