சென்னைக்கு அடுத்த மாதம் கிருஷ்ணா நீர்-ஆந்திரம் தருகிறது
சென்னை குடிநீர் பிரச்சனையை சமாளிக்க ஆந்திரா அரசுடன் தமிழக அரசு கிருஷ்ணா தண்ணீரை பெறுவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இதன்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரை வழங்கி வருகிறது.
கிருஷ்ணா கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு வந்து பின்னர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து முதல் தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.பி. தண்ணீரும், 2வது தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் விட வேண்டும் என்பது ஒப்பந்தம் என்றாலும் அணையில் நீர் இருப்பு, சென்னையின் தண்ணீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு கூட்டியும் குறைத்தும் தந்து வருகிறது.
கண்டலேறு அணையில் 6.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் சென்னைக்கு ஆந்திராவால் தண்ணீர் தர முடியும். தற்போது அந்த அணையில் 39.91 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே, சென்னை நகருக்கு தண்ணீர் விட வேண்டும் என்று தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்தது.
இதையடுத்து அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு நீரைத் திறந்துவிடும் என்று தெரிகிறது.
தற்போது சென்னை நகருக்கு குடி நீர் வழங்கும் ஏரிகளில் தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தாலும் தண்ணீர் கிடைத்து வருகிறது.