கோவா பழங்குடியின மக்கள் போராட்டம்: தொழிற்சாலைக்கு தீவைப்பு- 2 பேர் பலி
பனாஜி: கோவாவில் பழங்குடியின மக்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பால்லி கிராமத்து மக்கள் ஒரு தொழிற்சாலைக்கு தீவைத்ததில் இருவர் கொல்லப்பட்டனர்.
கோவாவில் பழங்குடியின மக்கள் அரசு வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பால்லி கிராமத்தினர் ஒரு தொழிற்சாலைக்கு தீவைத்தனர். இதில் தொழிற்சாலைக்குள் ஒளிந்திருந்த 2 பழங்குடியின இளைஞர்கள் பரிதாபமாக தீயில் கருகி உயிர் இழந்தனர்.
அவர்கள் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று சுமார் 10 ஆயிரம் பழங்குடியின மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். மேலும், அரசு திட்டங்களில் முன்னுரிமை வேண்டியும், பழங்குடியின சட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரியும் ரயில் போக்குவரத்தையும் நிறுத்தினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தவே அங்கு பெரும் வன்முறை வெடித்தது.
ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வாகன்ஙகள் மீது கல்லெறிந்தனர், வனத்துறை சோதனைச் சாவடி, ரயில்வே சிக்னல் மற்றும் தண்டவாளத்தை சேதப்படுத்தினர். போராட்டக்காரர்கள் பால்லி கிராமத்தில் உள்ள பல கடைகளை அடித்து நொறுக்கினர். இதனால் ஆத்திரமடைந்த பால்லி கிராமத்து மக்கள் பழங்குடியின தலைவர் ஒருவருக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு தீவைத்தனர்.