மரியம் பிச்சைக்கு இரங்கல் தெரிவித்து திமுகவில் தீர்மானம்!!
திருச்சி: அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த அமைச்சரின் மரணம் தொடர்பாக திமுக செயற்குழுவில் தீர்மானம் போட்டது ஏன் என்று திருச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது, வியப்பாக பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் மரியம் பிச்சை தொடர்பாக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
தீர்மான விவரங்கள்:
- நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வது.
- கார் மீது லாரி மோதி மரணம் அடைந்த மரியம்பிச்சை மறைவுக்கு தலைவர் கருணாநிதி நேரில் சென்று மாவட்ட கழகம் சார்பில் அஞ்சலி செலுத்திட ஆணையிட்ட நிலையில் சில தீயசக்திகளின் தவறான பிரசாரத்தினால் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால் அஞ்சலி செலுத்திட இயலவில்லை என்றாலும் அவர் மாற்று கட்சியில் இருந்தாலும் கட்சி மாச்சரியம் இல்லாமல் இன, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி செயல்பட்டதை மனதில் கொண்டு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வது.
- மரியம் பிச்சை மரணம் அடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க இந்த அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
- மரியம் பிச்சை மறைவின்போது திருச்சி மாநகரில் உள்ள தி.மு.க. கொடி கம்பங்கள் வெட்டப்பட்டு, கல்வெட்டுக்கள் உடைக்கப்பட்ட போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கே.என். நேரு பேசுகையில்,
அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்ததை தி.மு.கவுடன் தொடர்புபடுத்தி சம்பந்தமே இல்லாமல் பேசி வருகிறார்கள். இப்படி பேசுவதாலும், எந்த சக்தியாலும் தி.மு.கவை அழிக்க முடியாது. தில்லைநகரில் நேருவுக்கு 63 வீடுகள், 7 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்து விட்டார் என்றெல்லாம் பொய் பிரசாரம் செய்தார்கள். இப்படி பொய் பிரசாரம் செய்ததால் தான் கழகம் தோல்வியை தழுவியது என்றார்.