குட்டியூண்டு எட்டு... இல்லன்னா...கூட கொஞ்சம் துட்டு: இப்படித்தான் எடுக்கிறார்கள் லைசென்ஸ்!
கோவை: இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்படுவதில் அரசின் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை.
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்
தமிழ்நாடு முழுக்க 61 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் நாள்தோறும் சுமார் 3 ஆயிரத்து 900 விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பதாரர்களிடம் கடைபிடிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் காற்றில் பறக்க விடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சாலை விபத்துக்கள் பெருக ஒருவகையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் காரணம்.
டெஸ்டிங் டிராக்
விண்ணப்பம் செய்தவர்கள், பயிற்சிக் காலம் முடித்து, எழுத்துத் தேர்வு முடித்து 'டெஸ்ட் டிரைவிங்" எனும் இறுதி கட்டம் வருகிறார்கள். டெஸ்ட் டிரைவிங் என்பது சாலையைப் போன்றே வடிவமைக்கப்பட்ட டிராக்கில் நடத்தப்பட வேண்டும் என்பது தான் விதி.
அந்த டிராக்கில் சாலைகளைப் போல சிக்னல்கள், நிறுத்தங்கள், வேகத்தடைகள், நடைபாதைகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் பயணித்து 'யூ டர்ன்" அடித்தல், திடீரென குறுக்கே வரும் பாதசாரி மேல் இடிக்காமல் சமாளித்தல், 'ஓவர் டேக்" செய்தல் போன்றவை இருசக்கர வாகன ஓட்டிகளால் செய்து காண்பிக்கப்பட வேண்டும் என்பது தான் விதி.
எங்கே இருக்கிறது டெஸ்டிங் டிராக்
ஆனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆர்.டி.ஓ அலுவலகங்களில் டெஸ்டிங் கிரவுண்ட் என்பதே இல்லை. நாளொன்றுக்கு 300 லைசென்சுகள் வழங்கப்படும் கோவையில் 3 ஆர்.டி.ஓ அலுவலகங்கள் உள்ளன. ஆனால் அவை எவற்றிலும் டெஸ்டிங் டிராக் வசதி இல்லை.
குட்டியூண்டு எட்டு
இந்த வசதி இல்லாததால் பெரும்பாலும் காலி மைதானங்களில் இந்த டெஸ்ட் நடைபெறுகிறது. ஒரே நாளில் ஒவ்வொரு மோட்டார் இன்ஸ்பெக்டரும் குறைந்தது 70 முதல் 100 நபர்களைப் பரிசோதனை செய்ய வேண்டி இருப்பதால் அவர்களால் பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் சிறிய நிலப்பரப்பிற்குள் 8 எனும் வடிவத்தில் இருசக்கர வாகனத்தைச் செலுத்துபவருக்கு ஓகே என 'டிக்"அடித்து விடுகின்றனர்.
தலைவிரித்தாடும் லஞ்சம்
விண்ணப்பம் செய்தவர்களுக்கு வேண்டியவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்தால், அவர்கள் எழுத்துத்தேர்வு, ஆன்-லைன் தேர்வு, நேரடி தேர்வு ஆகியவற்றிற்குச் செல்லாமல் இருந்த இடத்திலேயே லைசென்ஸை வரவழைத்துக்கொள்கிறார்கள்.
இது தவிர, ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சமும் பலருக்கு லைசென்ஸ் பெறும் வழியினைச் சுலபமாக்கி இருக்கிறது. ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மூலமாக விண்ணப்பிக்கும் பலரும் தேர்வுகளை சுலபமாக கடந்து விடுகிறார்கள்.
அதிகரிக்கும் விபத்துக்கள்
போக்குவரத்து விதிகள் தெரியாமை, முறையான பயிற்சி இல்லாமை, சாலை குறியீடுகளைப் பற்றிய அறிவின்மை போன்ற காரணத்தால் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடக்கின்றன.
இவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களோ ஆயிரக்கணக்கான ஓட்டைகளோடு இருக்கிறது. லைசென்ஸ் வழங்குவதில் கொஞ்சம் கூடுதல் கெடுபிடி காட்டினால் சாலை விபத்துக்களை குறைக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
விரைவில் வரும்
இது குறித்து கோவை துணை போக்குவரத்து ஆணையர் உதயண்ணனிடம் கேட்டபோது,
“மாதிரி டெஸ்டிங் டிராக் ஒன்று பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வசதி கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு இன்னும் அமைத்து தரப்படவில்லை. இதனால் ஆய்வாளர்கள் மாநகராட்சி மைதானங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இது மாதிரியான ஒரு டிராக் அமைக்க குறைந்தது 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதற்கான இடம் தேடும் பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன" என்றார்.
பொழுது எப்போ விடியும்? பூ எப்போ மலரும்? சிவன் எப்போ வருவார்? வரம் எப்போ தருவார்? - என்று வேடிக்கையான பழந்தமிழ் பாடல் ஒன்றுள்ளது. அதுதான் நம் நினைவில் ஆடுகிறது.