கோயம்பேட்டில் 6.5 டன் மாம்பழங்கள், 600 கிலோ ரசாயனக் கற்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 6.5 டன் மாம்பழங்களும், 600 கிலோ ரசாயன கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
புறநகர்ப்பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏராளமான மாம்பழங்கள் வருகின்றன. வியாபாரிகள் இவற்றை ரசாயனக் கற்கள் மூலம் ஒரே நாளில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.
அவ்வாறு ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிற்றுக் கோளாறு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிகாரிகளின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிடும் வியாபாரிகள் தொடர்ந்து ரசாயனக் கற்களை பயன்படுத்துகின்றனர்.
இதை தடுக்க சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன் நடத்திய சோதனையில் 10 டன் மாம்பழங்களும், 1 டன் ரசாயன கற்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று நேற்று முன்தினம் காலையில் உணவு ஆய்வாளர் சதாசிவம் தலைமையிலான அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைத்த 6.5 டன் மாம்பழங்களையும், 600 கிலோ ரசாயன கற்களையும் பறிமுதல் செய்தனர்.