பொன்சேகாவின் இளைய மகளை விமான நிலையத்தில் தடுத்து விசாரித்த அதிகாரிகள்
பொன்சேகாவுக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் பெயர் அப்சரா பொன்சேகா. இவரது கணவர் தனுனு திலகரத்னே. 2வது மகள் பெயர் அபர்ணா பொன்சேகா.
தற்போது இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பொன்சேகா. அவரது மருமகன் தனுனு மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரையும் கைது செய்து உள்ளே தள்ள துடித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இதனால் தனுனு வெளிநாட்டுக்குத் தப்பிப் போய் விட்டார்.
அப்சராவும் வெளிநாட்டில்தான் வசித்து வருகிறார். இளைய மகள் அபர்ணாவும் அமெரிக்காவில்தான் தங்கியுள்ளார். சமீபத்தில் இவர்களது தாயார் அனோமாவும் அமெரிக்காவுக்குப் போயிருந்தார்.
சமீபத்தில் அபர்ணாவும், அனோமாவும் கொழும்பு திரும்பினர். அப்போது அபர்ணாவை இலங்கை உளவுப் பிரிவு அதிகாரிகள் நிறுத்தினர். அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். உடன் அனோமாவும் சென்றார்.
அபர்ணாவிடம், உங்களது கணவர் தனுனு குறித்த தகவலைக் கூறுங்கள் என்று விசாரணையைத் தொடங்கினர். இதைக்கேட்டு அனோமாவும், அபர்ணாவும் குழம்பி விட்டனர். தனுனு, எனது மூத்த மகள் அப்சராவின் கணவர், இது எனது இளைய மகள் அபர்ணா என்று அதிகாரிகளிடம் விளக்கினார் அனோமா.
இருந்தாலும் அதிகாரிகள் விடவில்லையாம். தொடர்ந்து விசாரித்துள்ளனர். பின்னர் பாஸ்போர்ட்களை தீவிரமாக ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில், வந்திருப்பது அப்ஸரா இல்லை, அபர்ணா என்று தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை விடுவித்தனராம்.
தந்தையைப் பார்த்தார்
பின்னர் தனது தாயார் அனோமாவுடன் வெளிக்கடை சிறைக்குச் சென்ற அபர்ணா, தனது தந்தை பொன்சேகாவைப் பார்த்து நலம் விசாரித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனோமா, 2 வார காலம் எனது கணவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
விமான நிலையத்தில் அபர்ணாவை கிட்டத்தட்ட கைது செய்து விசாரிப்பது போல விசாரித்தனர். கேட்டதற்கு அனைவரையும் தீவிரமாக விசாரித்த பிறகே அனுப்ப வேண்டும் என்று தங்களுக்கு உத்தரவு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
எனது தாயகத்தில்,இப்படி ஒருநிலைமை எங்களுக்கு ஏற்பட்டிருப்பது பெரும் வேதனை தருகிறது என்றார் அனோமா.