சென்னையில் வெயிலைக் காணவில்லை-காலையிலிருந்த 'மோடம்'
சென்னை : தலைநகர் சென்னையிலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று வெயில் அடியோடு குறைந்து காணப்படுகிறது. சென்னையில் காலையிலிருந்து வெயிலை பெருமளவில் காணவில்லை. வானம் மேகமூட்டமாக உள்ளது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் 28ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வெயிலின் அளவு தமிழகத்தில் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. தென் மேற்குப் பருவ மழை தொடங்குவதற்தான சாதகமான சூழலும் உருவாக ஆரம்பித்துள்ளது.
சென்னையில் நேற்று வெயில் பெருமளவில் குறைந்திருந்தது. சராசரியாக 100 டிகிரியாக வெயில் குறைந்துள்ளது.
அதேசமயம், வேலூரில் தொடர்ந்து வெயில் அதிகமாகவே உள்ளது. அங்கு நேற்று 106 டிகிரியாக வெயில் இருந்தது.
பிற ஊர்களிலும் வெயில் படிப்படியாக குறைந்து வருகிறது. தென் மாவட்டங்களில் வெயிலின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும் வெயில் நன்றாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் சென்னையில் இன்று காலையிலிருந்தே வெயில் வெகுவாக குறைந்து வானம் மோடமாக உள்ளது. வெயிலே தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இருப்பினும் லேசான புழுக்கம் காணப்படுகிறது. மழை வரும் போல உள்ளது. இருப்பினும் இதுவரை அதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் அவ்வப்போது திறப்பதும், மூடுவதுமாக உள்ளதால் மாலையில் நல்ல மழை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருவதால் அதன் பிறகு வெயில் மேலும் குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் மேற்குப் பருவமழையில் பாதிப்பு வராது
அந்தமான் கடல் பகுதியில்தான் முதலில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். ஆனால் அங்கு மழை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை ஆரம்பிக்கவில்லை.
அந்தமானைத் தொடர்ந்து கேரளாவில் மழை தொடஹ்கும். இந்த மழை கேரளாவைத் தவிர தமிழகம் உள்படநாட்டின் பல மாநிலங்களுக்கும் அதிக மழையைக் கொடுக்கும்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், மேற்குப் பகுதி மாவட்டங்களுக்கும்தான் இந்த மழையால் அதிக பலன் கிடைக்கும். அதேசமயம், மேற்குத் தொடர்ச்சி மழை தடுப்பதால் மழையின் அளவு குறைவாகவே இருக்கும்.
கடந்த ஆண்டு வழக்கத்திற்கு விரோதமாக அரபிக் கடலுக்குப் பதிலாக வங்கக் கடலில் லைலா புயல் உருவாகி தமிழகத்தை மழை வெளுத்தெடுத்தது நினைவிருக்கலாம். பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த இந்த மழையால் தமிழகமே நனைந்து போனது.
வழக்கமாக தென் மாவட்டங்களில் பெய்யும் மழை நிலைமை மாறி, மழைக் காலம் அல்லாத சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிப்புக்குள்ளானது.
இந்த ஆண்டு மழை 31ம் தேதி கேரளாவில் தொடங்கும் எனத் தெரிகிறது.