வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி பலி
வாணியம்பாடி: வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி 80 வயது தாயும், அவரது 2 மகன்களும் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
பெங்களூர் அனுமந்தப்பா நகரைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (80). இவரது மகன்கள் சீனிவாசன் (45), ரமேஷ் (44).
இவர்கள் தங்களது உறவினர் கிருஷ்ணப்பா உள்பட 11 பேர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆசனாம்பட்டு கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
பின்பு வாணியம்பாடி வழியாக பெங்களூர் செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் செல்ல வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு பாப்பம்மாள் உள்பட 11 பேரும் சென்றனர்.
அவர்கள் மேம்பாலம் வழியாக செல்லாமல் ஒவ்வொருவராக தண்டவாளத்தை கடந்து சென்றனர். பாப்பம்மாள் தண்டவாளத்தைக் கடக்கையில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் மின்னல் வேகத்தில் வந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ், சீனிவாசன், கிருஷ்ணப்பா ஆகிய மூவரும் பாப்பம்மாளை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் 4 பேர் மீதும் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் பாப்பம்மாள், ரமேஷ், சீனிவாசன் ஆகியோர் அதே இடத்தில் உடல் சிதறி இறந்தனர். கிருஷ்ணப்பா படுகாயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.