இன்டர்போல் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட கேபி
விடுதலைப் புலிகள் உச்சத்தில் இருந்தபோது அதன் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், கேபி உள்ளிட்டோரின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.
இவர்களில் கேபியை பல்வேறு சதி வேலைகளுக்குப் பின்னர் கைது செய்தது இலங்கை உளவுப்படை. பின்னர் அவரை இலங்கைக்குக் கொண்டு வந்து உரிய முறையில் விசாரணை நடத்தி, அவர் வசம் இருந்த பெருமளவிலான பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்துக்கள் குறித்த தகவல்களையும் கறந்தது.
பின்னர் அவரது தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டு தங்களது கஸ்டடியில் வைத்துள்ளது.
தற்போது இலங்கை அரசின் குரலாக மாறியுள்ளார் கேபி. அவர் கைது செய்யப்பட்ட பின்னர் இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து கேபியின் பெயர் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவரது பெயரைஇன்டர்போல் சேர்த்துள்ளது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேபி இலங்கை அரசின் கஸ்டடியில் இருக்கும் நிலையி்ல் அவரை தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்துள்ளது ஏன் என்று புரியவில்லை.
சமீபத்தில் இந்தியாவின் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கேபி அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அவர் பலகருத்துக்களைக் கூறி மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில், அவரது பெயர் மீண்டும் இன்டர்போல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால் இதற்கு இந்தியாவின் பின்னணி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.