தேர்தல் விதிமீறல் வழக்கு: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ரித்தீஸ் ஆஜர்
ராமநாதபுரம்: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் திமுக எம்.பி. ஜே.கே. ரித்தீஸ் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதி திமுக எம்.பி.யான ஜே.கே. ரித்தீஸ் பல்வேறு அத்து மீறல்களில் ஈடுபட்டார்.
இதில், சோழந்தூர் அருகே உள்ள பிச்சங்குறிச்சியில் தலித் சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அவர் மீது பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் தேர்தல் முடியும் வரை ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அதன் பின்பு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் திமுக எம்.பி. ரித்தீஷ் இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்திய வரலாற்றிலேயே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவரது தொகுதிக்குள் நுழைய தடை விதித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.