சாயக் கழிவு நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண இன்று முக்கியப் பேச்சு
சென்னை: திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவினர், தொழில்துறையினர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கொங்கு மண்டலமே இந்த சாயக் கழிவு நீர்ப் பிரச்சினையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான சாயப்பட்டறைகள் உரிய கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாத காரணத்தால் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டு விட்டன.
கொங்கு மண்டலத்தில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து தற்போது சாயப்பட்டறை பிரச்சினைக்குத் தீர்வு காண முழு வீச்சில் களம் இறங்கியுள்ளார் ஜெயலலிதா. இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அவர் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து முதல்கட்டமாக, சாயத் தொழில் அதிபர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசவும், அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் அழைத்துப் பேசுமாறும் முதல்வர் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து தொழில் துறை அமைச்சரும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான சி. சண்முகவேலு திருப்பூரில் சாயப்பட்டறை ஆலைகளின் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். சனிக்கிழமை திருப்பூரில் நடந்த நகராட்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும் சாயப்பட்டறை கழிவு நீர் பிரச்னை பற்றி பேச்சு வந்தது.
இப்போது விவசாய சங்கத்தினருடனும், திருப்பூர் பகுதி ஜவுளி தொழில் துறையினருடனும் சாயக் கழிவு பிரச்னை தொடர்பான துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளனர்.
வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு, கைத்தறி துறை அமைச்சர் பி.வி.ரமணா, பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம், ஒரத்துப்பாளையம் அணை மாசுபட்ட நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனும் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
இப்போது திருப்பூர் பகுதியில் உள்ள ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் இரு தரப்பினரையும் கலந்து பேசி, பிரச்னையைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளின் பட்டியலைத் தயாரிக்கவுள்ளனர்.
அதன் பின்னர்தொழில்நுட்பக் குழுவினரின் கருத்துக்களையும் பெற்று, இறுதி அறிக்கையாக்கி அதை முதல்வர் ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் சமர்ப்பிப்பார்கள். அதன் இறுதியில் தீர்வுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ள ஆளுநர் உரை குறித்த ஆலோசிக்கப்பட்டது.
ஆளுநர் உரையில் இடம்பெறும் அரசின் கொள்கை முடிவுகள், அரசு கேபிள் டிவி, இலவச லேப்டாப், இலவச அரிசி ஆகியவை குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.