ஹெட்லி தந்தையின் இறுதிச் சடங்கில் நான் கலந்து கொள்ளவில்லை-கிலானி
சிகாகோ கோர்ட்டில் ஹெட்லி அளித்த சாட்சியத்தின்போது, தனது தந்தை சயத் சலீம் கிலானி மறைவின்போது பிரதமர் கிலானி தனது வீட்டுக்கு வந்து துக்கம் கேட்டதாகவும், ஆறுதல் கூறியதாகவும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாகவும் கூறியிருந்தான். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பிரதமர் கிலானி தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சலீம் கிலானியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. அவரது வீட்டுக்கும் போகவில்லை. ஹெட்லியின் ஒன்று விட்ட சகோதரரான தன்யால் கிலானியின் வீட்டுக்கு மட்டுமே இரங்கல் தெரிவிக்கச் சென்றிருந்தேன் என்று கிலானி கூறியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தன்யால் கிலானி, பிரதமர் கிலானியின் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார் என்றும் செய்திகள் கூறின. அதையும் கிலானியின் அலுவலகம் மறுத்துள்ளது. தன்யால், சீனாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், செய்தித் தொடர்பாக பணியாற்றி வருவதாக கிலானி அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.