தேர்தலில் திமுக தோற்றதற்கு மின்தடை தான் காரணம்: வெள்ளக்கோவில் சாமிநாதன்
திருப்பூர்: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கு மின்தடை தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகிகள் கூட்டம், திருப்பூர் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசியதாவது,
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் திமுக வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது.
ஆனால் தற்போது மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியபோதும், மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளனர்.
திமுக அரசு மீது மக்களுக்கு கோபம் ஏற்பட முக்கிய காரணமே கடும் மின்வெட்டு தான். எனினும், திமுகவை ஒட்டுமொத்தமாய் ஓரங்கட்டாமல் கணிசமான வாக்குகளை திமுகவுக்கு அளித்துள்ளனர்.
அடுத்த தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகளை நாம் பெறும் வகையில் மககள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு சாமிநாதன் பேசினார்.