இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான வீடியோ காட்சிகள் உண்மை-ஐ.நா
ஜெனீவாவில் தொடங்கிய ஐ.நா. மனித உரிமை மாநாட்டின் முதல் நாளில் அவர் இதுதொடர்பாக 482 பக்கம் கொண்ட மிக விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான வீடியோக்களையும் இணைத்துள்ளார். அதில் ஒரு வீடியோ புதியதாகும். கைகளை கட்டி வைத்து தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சி அதில் அடங்கியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த சானல் 4 தொலைக்காட்சிதான் முதலில் இதை வெளியிட்டது. இருப்பினும் கென்ஸ் இணைத்துள்ள வீடியோ புதிதானது. அதில் ராணுவத்தினரின் முகங்கள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றன.
இதுகுறித்து கென்ஸ் அளித்துள்ள அறிக்கையில்,
சானல் 4 வீடியோ வெளியிட்ட காட்சிகள் உண்மையானவை. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவை உண்மையானவை, நிஜமானவை. இலங்கையில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
தொழில்நுட்ப ரீதியாகவும் தடயவியல் ரீதியாகவும் துறை சார் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அந்த வீடியோ உண்மையானது, நம்பகமானது. அங்கு என்ன நடந்தது என்பதை அதிலுள்ள காட்சிகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. அந்த வீடியோவில் காணப்படும் சிலரின் முகங்கள் மிகத் தெளிவாகத் தெரிவதால் அவர்களை இனங்காண்பது இலங்கை அரசுக்கு அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல.
இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்காகவும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச விசாரணை ஒன்று தேவையான அதிகாரங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த குற்றங்களில் இலங்கை அரசோ அல்லது அதன் பகுதிகளோ குற்றவாளிகள் என்பதை சட்டங்களின் மூலம் மட்டுமே நிரூபிக்கப்பட முடியும். இலங்கையில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதற்கு இது ஆதாரம்.
இதனையும் இன்னும் கிடைக்கக்கூடிய ஆதரங்களையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் விசாரணையாளர்களால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேசமயத்தில் இதற்குப் பொறுப்பானவர்களைத் தேடிக் கண்டறியும் தெளிவான நோக்கத்தோடு சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் கென்ஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு அமெரிக்கா கோரிக்கை
இலங்கையில் நடந்த போர்க்குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான, பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கப் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் நடந்த மோதல்களின் போது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்களை எந்தத் தரப்பு செய்தது என்று கவனத்தில் கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் உடனடியாக நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும்.
அதிகார மற்றும் சட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து இந்த பேரவை கருத்திற் கொள்ள வேண்டும். யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் ஆராய வேண்டும் என்றார்.
இதற்கிடையே இந்த அறிக்கையை, ஐ.நா. நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை.
நவி பிள்ளை மனித உரிமைக் கவன்சில் கூட்டத்தில் பேசுகையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறைகள் குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.
இதற்கிடையே இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதத்தை தடுத்து நிறுத்த பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் சில இஸ்லாமிய நாடுகள் முயன்றன. இலங்கையில் அமைதி தொடர அனைத்து நாடுகளும் உதவ வேண்டும் என்று அவை கேட்டுக் கொண்டன.