பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது
சென்னை: தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டத்தின் கீழ் 6.4 கோடி புத்தகங்களை அச்சிடும் பணி தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களை ஜூன் 15-ம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் புத்தகங்கள் முதலில் அச்சிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிக தொகைக்கு ஒப்பந்தம்
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பத்தாம் வகுப்புவரை இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருந்தது. இதற்காக ரூ.216 கோடி செலவில் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. ஆனால், இந்தப் பாடத்திட்டம் கல்வித் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து பழையப் பாடத்திட்டத்தின்படி, புதிதாக 6.4 கோடி புத்தகங்களை அச்சிடுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.
இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்ட தொகையில் மிகவும் குறைவான தொகையில், புத்தகத்தை அச்சடித்துத் தரும் ஒப்பந்தத் தொகையாக அதிகாரிகள் நிர்ணயம் செய்தனர்.
இந்த ஒப்பந்தத் தொகை, பாடப்புத்தகங்களுக்கு ஏற்கெனவே நிர்ணயம் செய்த தொகையைவிட சற்று அதிகம் என்று கூறப்படுகிறது. குறைந்த காலத்தில் புத்தகம் அச்சடிப்பது, பள்ளிகளுக்கே நேரடி விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தத் தொகைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
பதிப்பாளர்கள் ஆர்வம்
புத்தகங்களை அச்சிட்டுத் தருவதற்கு 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் போடப்பட்டது. புத்தகங்களை அச்சிட்டு வழங்க நூற்றுக்கும் அதிகமான பதிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுடன் ஓரிரு நாளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
6.4 கோடி புத்தகங்கள்
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களில் நிறைய வண்ணப் பக்கங்கள் உள்ளன. இந்தப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க பெரிய பதிப்பாளர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் பல பெரிய பதிப்பாளர்களும் புத்தகங்களை அச்சிட்டுத் தருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள புத்தகங்களை அச்சிடுவதற்கு சிவகாசியில் உள்ள பதிப்பாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளோம். இந்த முறை பதிப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் குறைந்த காலத்தில் புத்தகங்கள் அனைத்தும் அச்சடிக்கப்படும். இந்தக் கல்வியாண்டுக்குத் தேவையான 6.4 கோடி புத்தகங்களை 15 நாட்களுக்குள் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். ஆனால், இந்தப் பணிகள் முடிய குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் ஆகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.