கோவையில் வாடகை கார்களை விற்ற பொறியியல் பட்டதாரி கைது
கோவை: கோவையில் கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை அடமானம் வைத்தும், விற்றும் ஜாலியாக இருந்த பலே கில்லாடியை போலீசார் கைது செய்யதுள்ளனர்.
இன்ஜினியரிங் பட்டதாரி
கோவை துடியலுரைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி சரூன். 24 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியைச் சேர்ந்த ஆண்டர்சனை அணுகி 'கோவையிலுள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு சொகுசு கார்கள் வாடகைக்கு அதிக அளவில் தேவைப்படுகின்றன. ஏற்பாடு செய்து கொடுத்தால் நல்ல கமிஷன் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
17 கார்கள்
இதனை நம்பிய ஆண்டசன், தனக்கு தெரிந்த இடங்களில் இருந்து 17 கார்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்தக் கார்களுக்கான வாடகை முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே சரியாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அடியோடு நிறுத்தப்பட்டது. வாடகைக்கு கார்களைக் கொடுத்தவர்கள் கடுப்பாகி ஆண்டர்சனை நெருக்கினர். ஆண்டர்சன் விசாரித்தபோது பிரச்சனை ஏற்பட்டது. கார்களை விரைவில் திருப்பி அனுப்பி வைப்பதாக சரூன் அவரிடம் தெரிவித்தார்.
அடமானம்
சந்தேகம் அடைந்த ஆண்டர்சன் விசாரித்தபோது சரூன் சொகுசு கார்களை கோவையில் பல்வேறு இடங்களில் அடமானம் வைத்திருப்பது தெரிய வந்தது. சில கார்களை அவர் விற்றும் விட்டார். இது தொடர்பாக காவல்துறை ஆணையாளர் சைலேந்திர பாபுவிடம் புகார் கொடுக்கப்பட்டது.
கைது
விசாரணையில் சரூன் தன் ஆடம்பரச் செலவிற்காக கார்களை அடமானம் வைத்ததும், விற்றும் செலவழித்தது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட சரூனை போலீசார் கைது செய்து கார்களை மீட்டனர். மீட்கப்பட்ட கார்கள் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.