16 வருட போராட்டத்திற்குப் பின் பிளஸ்டூ பாஸ் செய்த ஒரிஸா அமைச்சர்
'மேல் படிப்பு' தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரிசா மாநில பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரமேஷ் சந்திர மாஜி வெற்றிகரமாக பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார் ரமேஷ் சந்திர மாஜி. அவர் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதினார். அதில் 600-க்கு 376 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் பூங்கொத்துகள் மற்றும் இனிப்பு கொடுத்து அமைச்சரை வாழ்த்தினர்.
இது குறித்து அமைச்சர் மாஜி கூறியதாவது,
இத்தனை வேலைகளுக்கிடையே நான் பிளஸ் டூ தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் மேலும் படிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.
அமைச்சர் நவரங்பூர் மாவட்டத்தில் உள்ள பனபேடா மகாவித்யாலயாவில் தேர்வு எழுதினார். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் சென்றுகொண்டு தேர்வையும் எழுதினார். இருப்பினும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்
என்ன காமெடி என்றால், 1995ல் அறிவியல் பாடத்தில்தான் பெயிலானார் ரமேஷ். அறிவியலில் பெயிலான அவர் இப்போது அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கிறார்.
அறிவியல் பாடத்தை மட்டும் எழுதாமல் மொத்தப் பாடத்தையும் இந்த முறை தேர்வில் எழுதினார் ரமேஷ். அதில் அனைத்திலும் பாஸாகி சாதனையும் படைத்து விட்டார்.
சரி பிளஸ்டூ பாஸாயிட்டீங்க, அடுத்து என்ன செய்யப் போறீங்க என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மேல் படிப்பு குறித்தெல்லாம் நான் முடிவு செய்யவில்லை என்றார் ரமேஷ்..