வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானேசேகரனுக்கு கொலை மிரட்டல் - காவல் நிலையத்தில் புகார்
வேலூர்: வேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஞானேசேகரனுக்கு மர்ம நபர்கள் செல் போனில் கொலை மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஞானேசேகரன். இவர் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் படு தோல்வியைச் சந்தித்தார்.
ஞானசேகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர் விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது பேசி வந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவருக்கு எக்ஸ் 4 பிரிவின் கீழ் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பணியில் 4 போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
சட்ட மன்ற தேர்தல் முடிந்து அதிமுக பதவியேற்ற பின்பு அவரது பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ் மட்டும் போட்டப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு போலீசாரின் வாகனம் திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞனசேகரன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
எனக்கு வெளிநாட்டில் இருந்து செல்போன் மூலம் நேற்று போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதே போல 3 முறை போனில் மிரட்டினார். எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரனுக்கு கொலை மிரட்டல் நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.