நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து தி.க. 8 ம் தேதி போராட்டம்
நெய்வேலி: லாபம் கொழிக்கும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க இருப்பதை கண்டித்து ஜூன் 8 ம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்,
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, கடந்த ஏப்ரல் மாதத்தில் நவரத்தினங்களில் ஒன்று என்று பெருமை பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேசனின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு யோசித்துக் வருகின்றது என்றும், குறைந்தது 10 விழுக்காடு பங்குகளையாவது விற்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து தமிழ்நாடு அரசினை மத்திய அரசு இது சம்பந்தமாக ஆலோசனை செய்யும் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே பொதுத்துறையின் சிறப்பான நிறுவனமாக இயங்கிவரும் இதனை பொதுத்துறையிலிருந்து மெல்ல மெல்ல தனியார் துறைக்கு மாற்றிட அவ்வப் போது முயற்சி நடைபெறுவதும், அதனை தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி , பொது அமைப்புகள் ஆகியவைகளின் கடும் எதிர்ப்புக் தெரிவித்து வருகின்றது. இதன் காரணமாக அந்த விவகரத்தை தள்ளி, தள்ளிப் போடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
நட்டத்தில் நடைபெறும் பொதுத் துறை நிறுவனங்களை விற்கிறோம் என்றால் கூட நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், லாபத்தில் சிறப்பாக நடைபெறும் நெய்வேலி, திருச்சி பாய்லர் தொழிற்சாலை போன்ற நவரத்தினங்களை விற்கலாமா ?
சில நாள்களுக்கு முன்பு தான், நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேசனின் தலைவர் அன்சாரி அவர்கள் 1298 கோடி ரூபாய் லாபம் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்லுவது எந்த வகையில் புத்திசாலித்தனம் ? முன்பு வாஜ்பேயி - பி.ஜே.பி. ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங் களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு தனி அமைச்சர் (Minister for Disinvestment) ஒருவர் (அருண்ஷோரி) இருந்தார்.
இப்போது அப்படி சொல்லிக் கொள்ளாமலேயே, கமுக்க மாக காரியங்களை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (UPA) செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது!
இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, தி.மு.க. போன்ற மத்திய அரசில் இடம் பெற்ற கட்சிகளும் மற்ற அனைத்துக் கட்சிகளும் எதிர்த்துத் தடுத்து நிறுத்தவேண்டும்.
முன்பு, அசாமிலும் மற்ற சில வட மாநிலங்களிலும் பெட்ரோலிய எண்ணெய் எடுத்தல், நிலக்கரி எடுத்தலுக்கு மத்திய அரசு உரிமத் தொகை (ராயல்டி) வழங்குவது போல தமிழ்நாட்டிலும் நெய்வேலி நிலக்கரி நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி தொகை மாநில அரசுக்கு வழங்க வேண்டிப் போராடியது திராவிடர் கழகம். அதில் வெற்றியும் பெற்று விட்டோம். அதன் பயன் தமிழ்நாடு அரசுக்கு அது எக்கட்சி ஆட்சியாக இருந்தபோதிலும் கூட தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இதன் பங்குகளை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால், தமிழக அரசுக்கு வரும் உரிமைத் தொகை - ராயல்டி அளவும் கூட பெரிதும் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடக் கூடும் என்பதாலும், அந்தக் கண்ணோட்டத்திலும் முழு மூச்சோடு தமிழ்நாடு அரசு - மாநில அரசு எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளது!
எனவே, இலாபம் கொழிக்கும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க இருப்பதை கண்டித்து நெய்வேலியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் துரை. சந்திரசேகரன் தலைமையில், வரும் ஜூன் 8 ம் தேதி நெய்வேலியில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.