மேட்டுப்பாளையம் கோயிலில் தலித் மாணவன் மீது தாக்குதல்: கி.வீரமணி கண்டனம்
மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் கோயிலில் தலித் மாணவனை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய அர்ச்சகர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்க பதிவு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
கோவை மேட்டுப்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் (17) ஒருவர், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, அருகில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, தனது தங்கைக்கும் வைத்துள்ளார்.
இதைப் பார்த்த அந்தக் கோயிலின் அர்ச்சகரும், அவரது மகனும் ஓடி வந்து அவர்களை அடித்தும், மிகவும் கேவலமாகப் பேசியும் அவமானப்படுத்தியுள்ளனர்.
அந்த இளைஞர் அடி தாங்காமல் கத்தியுள்ளார். அந்த தலித் மாணவ, மாணவியை தாக்கிய அர்ச்சகர் மீதும், அவரது மகன் மீதும் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடுக்காமல் வெறுமனே திட்டினான், காயப்படுத்தினான் என்று மென்மையான வழக்கை பதிவு செய்துள்ளது முறையல்ல.
அந்த அர்ச்சகர் மீதும், அவரது மகன் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும்படி கோவை மண்டல காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு வாரத்திற்குள்ளாக இதற்கான சரியான சட்டப் பிரிவுகள் கொண்ட வழக்கை கோவை மாவட்ட, குறிப்பாக மேட்டுப்பாளை யம் காவல்துறை மேற்கொள்ள வேண்டியது அவசரம் மட்டுமின்றி அவசியமுமாகும்.
இல்லையேல் திராவிடர் கழக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ள சமூக நீதிப் போராளிகள் இணைந்து அறப்போராட்டம் நடத்த தயங்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.